Sunday 24 January 2010

இயற்கை குழந்தை



Visibility பூஜ்ஜியமென வீதியெங்கும் பேச்சு...
வழியெங்கும் வியாபித்திருக்கும்
வெள்ளைப் பணிக்குடையை
வர்ணிக்க ஆளில்லை,
வசைக்க மட்டும் ஆயிரம் பேர்...

மாலைச் சூரியன் மறைந்ததும்
கூட்டினில் அடைந்திடும் குஞ்சுபோல்
வீட்டினில் வந்து சேர்ந்து
பாரினில் நடந்த கதைபல பேசி
ஊனுக்கு உணவிட்டு
உறங்கச் சென்ற கரிகாலன் காலத்திலும்
பனிக்காலம் இருந்திற்று...

கோலங்களுக்காகவும், செல்விக்காகவும்
உறக்கத்தை தள்ளிப்போட்ட மனைவிமார்களும்
பேய்கூட பாய் போட்டுறங்கும் வேளையில்
பணிமுடிந்து திரும்பும் கணவன்மார்களும்
நிறைந்த இக்காலத்தேயும்
பனிக்காலம் இருக்கத்தான் செய்கிறது...

பனி அதிகமாகவில்லை
மனிதா
உன் பணி தான் அதிகமாகிவிட்டது...
Car'இனில் செல்கையில்
கடும்பனியையும் காலமாற்றங்களையும் கடிபவனே
கவலை கொள்ளாதே!
ஓசோனில் ஓட்டைபோட தெரிந்த உனக்கு
இது எம்மாத்திரம்...
இமாலயம் உருகுகிறது இங்கே
எரிமலைகள் வெடிக்கிறது அங்கே
உன் கைங்கர்யங்களில் நொடிந்து போன
இயற்கை குழந்தையின்
கோபமும் தாபமும் தான் அது...

என்னடா, இயற்கையெனில் அன்னை தானே?
ஏது குழந்தையென வியக்காதே!
அன்னை தான் மறித்து
பல மாமாங்கம் ஆயிற்றே...
குழந்தையின் குரல்வளையை
நசுக்கத் தான்
இங்கே போராட்டம் நடக்கிறது...

காலங்களை குற்றஞ் சொல்லாதே!
மானுடகாலமே காலமாகிக் கொண்டிருப்பதை உணர்..
வாழ்க மானுடம், வாழும் காலம் வரை,
பாவம் இயற்கை, பாழும் காலம் வரை...