Thursday 3 December 2009

என் தந்தையின் பார்வையில்...


மறந்தும் கூட எடுத்துவிடாமல்
தெரிந்தே மறந்துவிட்டு சென்ற
என் மூக்கு கண்ணாடியை
எடுத்து வரும்படி
வாசலில் இருந்து பணித்தேன்...
"உங்களுக்கு எப்பவும் இதே வேலை,
எப்படித் தான் மறந்து போவீங்களோ?" என
செல்லமாய் சிணுங்கிக் கொண்டே
உள்ளிருந்து வரும் உனக்கு
புன்னகையை பதிலாய் வழங்கி
கண்ணாடியை வாங்கி
சட்டைப் பையில் வைத்துவிட்டு
இடப்பக்க கண்ணாடியில்
உதட்டை சுழித்து வழியனுப்பும்
உன் பிம்பத்தை
பார்த்து விட்டு செல்லும்
அந்த நாட்கள் மட்டுமே
இனிதாய் கழிகின்றன எனக்கு...
இதை எப்படி புரிய வைப்பேன்
என் ஞாபகமறதியை
குற்றஞ் சொல்லும்
நம் மகனிடம்...

Wednesday 11 November 2009

நானும், நீயும், மழையும்...

நேற்று நள்ளிரவில் கலைஞர் தொலைக்காட்சி செய்த பெரும்பிழை தொடர்ந்து ஐம்பது (குறைந்த பட்சம்) மழைப் பாடல்கள் ஒளிபரப்பியது தான். அத்தனைப் பாடல்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் பொழுது மழைப் பெண்ணை பற்றி எழுதாமல் உறக்கம் எங்ஙனம் வரும்? இதோ அந்தக் கவிதை...



வானம் கறுத்து மழை வரத்துவங்கும்
அந்நேரங்களில்
உன் முகமும் கறுத்துப் போகும்...
எனக்கும் உனக்கும் இடையே
இவளொருத்தி வந்துவிட்டாளே
என புகைவாய் உள்ளுக்குள்..
குடையும் மழையங்கிகள்  வீட்டில் இருந்தும்
'எடுத்து வர மறந்து விட்டேனே'
என்பேன் நான்,
உன் சிறிய குடையில்
இருவரும் ஒன்றாய் நடக்கும்
அந்த இனிய தருணங்களுக்காக..

இருவரது முதுகுகளிலும் மழைநீர்
சொட்ட சொட்ட
முன்னந்தலைகளை முட்டிக் கொண்டு
மெல்ல ஊர்ந்து செல்வோம்
சென்னை சாலைகளில்...
காதலர்களை கண்டோ என்னவோ
கார்கள் கூட ஒதுங்கிச் செல்லும்
சேற்றினை வாரி இறைக்காமல்...

மழைப் பெண்ணின் மேல்
நீ கொண்ட கோபத்தை
மேலும் கூட்ட வேண்டுமென்றே
குடைக்கு வெளியில் செல்வேன் நான்.
'அச்சோ! உள்ள வாங்க'
என்று என்னை இழுத்தணைத்து
குடையினுள் கொண்டு வருவாய்...
அந்த சில நேரங்களில் மட்டும்
மழையை மெச்சுவாய் நீ,
கடவுளை மேச்சுவேன் நான்...

சண்டை சமாதனம் ஆயிற்று
என நினைப்பதற்குள்
ஒரு தும்மல்
தும்மி விடுவேன் நான்...
'இந்தா பிடி, என் சாபம்'
என மழையை வைதுவிட்டு
வீட்டினுள் நுழைந்தவுடன்
காபி போட சென்று விடுவாய் நீ...

உடை மாற்றி, தலை துவட்டி
இன்னும் ஈரமாகவே சமையலறையில்
மும்முரமாய் இருக்கும் உன்னை
பின்னால் வந்து
கட்டி அணைப்பேன் நான்!
'அடப் பாவிகளா!
மொத்தத்தில்
உங்கள் காதல் போதைக்கு
நான் ஊறுகாயா?'
என புலம்பல் கேட்கும்
சமையலறை ஜன்னலில் பட்டுத்தெறித்த
மழைத்துளியிடம் இருந்து...

Tuesday 6 October 2009

சில தருணங்கள்...

சுட்டெரிக்கும் சூரியனையும்
சில்லென்று உணர்ந்ததுண்டு,
கைவிரல்கள் பற்றி கடற்கரையோரம் நடந்தபொழுது...

சிலிர்க்கும் இரவினை
சுடும் நெருப்பாய் அறிந்ததுண்டு,
அருகருகே இருந்தும் மௌனித்து பயணித்த பொழுது...

விளையாட்டில் தோற்றும்
வேதனையின்றி மகிழ்ந்ததுண்டு,
என்னைத் தேற்றுவதற்கு நீ வந்த பொழுது...

கசக்கும் பாகற்காயையும்
இனிப்பாய் சுவைத்ததுண்டு,
உனக்கு பிடித்தவை என தெரிந்த பொழுது...

இரவின் நீளத்தை
சிறிதோ என எண்ணியதுண்டு,
என்னவளாய் இன்று நீ ஆன பொழுது...

Sunday 27 September 2009

உன்னை போல் ஒருவன் - என் பார்வையில்



குருதி புனல் படத்திற்கு பிறகு பாடல்கள் இல்லாமல் வெளிவந்த ஒரு சிறந்த விறுவிறுப்பான திரை சித்திரம். "Wednesday" என்ற ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக் என்றாலும் கமலஹாசனின் நடிப்பாற்றலையும் அவர் மகளின் இசையையும் காணவே நேற்று திரை அரங்கிற்கு சென்றிருந்தேன்.

கதை கரு ஏற்கனவே தெரிந்தாலும் படம் பார்க்க செல்லும் சில மனிதர்களில் நானும் ஒருவன். திரைக்கதை அமைக்கப் பாத்திருக்கும் விதம் அறிய சென்றிருந்தேன். மோகன்லால் என்ற மிகச் சிறந்த நடிகரை தமிழ் படங்களில் அதிகம் பார்க்கும் பாக்கியம் நம் தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் என்னுள்ளே எழத் தான் செய்தது. இனி நாம் கதை களத்திற்கு வருவோம்...

ஒரு சாதாரண மனிதனின் கோபம் எங்கு சென்று முடியும் என்பது தான் கதை. போலீஸ் கமிஷனர்'க்கு போன் செய்து நகரத்தின் முக்கியமான பல பகுதிகளில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன் என்று சொல்லுவதில் ஆரம்பித்து இறுதியில் அனைத்தையும் முடித்துவிட்டு காய்கறி கூடையுடன் அந்த கட்டிடத்தில் இருந்து இறங்கிச் செல்லும் கடைசி காட்சி வரை கமலின் நடிப்பு தூக்கல். மோகன்லால்'ஐ பற்றி கேட்கவே வேண்டாம். போலீஸ் கமிஷனர்'ஆக கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறார். ஆனால் அரங்கத்தில் பிரபு அந்த வேடத்தை ஏற்று நடித்திருக்கலாம் என்ற கருத்துக்கள் செவியில் விழுவதை தவிர்க்க முடியவில்லை.

'கேரளா மட்டுமில்லை இதுவும் என் நாடு தான்' என தமிழ்நாட்டைப் பற்றி மோகன்லால் குறிப்பிடும் இடம் அருமை. Aarif'ஆக வரும் இளம் காவல் அதிகாரி முகத்தை இறுக்கமாக வைத்திருக்க ஏனோ என் நேரமும் Chewing Gum மென்றபடி கொண்டிருக்கிறார். இவரை ஏதோ ஒரு பனியன் விளம்பரத்தில் பாரத்ததாய் ஞாபகம். Police Informer'இன் வீட்டில் அவரின் தங்கையிடம் சில்மிஷம் செய்யும் அதிகாரியை புரட்டி எடுக்கும் காட்சி அருமை. Sethu'வாக வரும் அதிகாரியும் நடிப்பில் அருமை. லஞ்சம் வாங்கும் அதிகாரியின் பையில் இருந்து 100 ரூபாயை bike'காரரிடம் அளிக்க வைக்கும் இடத்தில் பளிச்சிடுகிறார்.  ஊருக்கு செல்லும் தன் மனைவி ஒருபுறம், தீவிரவாதிகளை கையாள வேண்டிய சூழல் மறுபுறம் என கதாபாத்திரம் வடிவமைக்கபட்டிருப்பது அருமையிலும் அருமை.

தன் flash back'ஐ சொல்லும் பொழுது 'கருவருத்தல்' என்னும் வார்த்தையின் பொருளை தான் உணர்ந்த இடத்தை கமலஹாசன் கூறும் தருணங்களில், அப்படி செய்த கயவர்களை நட்டநடு சாலையில் நிற்க வைத்து சுடவேண்டும் என்னும் வேகம் நம்மிடையே எழுகிறது. கனமான காரணம் தான் அவர் இவ்வாறு மாறுவதற்கு.

பெண் reporter என்றால் புகைப் பிடிக்க வேண்டும், Computer Geek என்றால் தலையை படியவாராமல் அலைய வேண்டும் என்ற Kollywood'இன் எண்ணம் மாற வேண்டும். ராகவன் மாறார் - இனிமையான மலையாள பெயர். நாயர் என்ற பெயர் இல்லாமல் ஒரு மலையாள character வைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

Shruthi Hassan'இன் இசை ஒரு த்ரில்லர் படத்திற்கு எப்படி அமைய வேண்டுமோ அப்படி இருக்கிறது. பாடல்கள் இருந்திருந்தால் அவரின் திறமையை மேலும் அறிய வாய்ப்பு அமைந்திருக்கும். பார்ப்போம். மீண்டும் ஒரு படத்திற்கு இசை அமைக்காமலா போய் விடுவார்.

சென்னை நகரத்தையும் நகரின் பல பகுதிகளையும் 'இவ்வளவு அழகா நம் நகரம்' என எண்ணும் வகையில் ஒளிப்பதிவு செய்தவர்க்கு பாராட்டுக்கள். 'நீங்க தான் எல்லாத்தையும் காட்றீங்களே' என தொலைக்காட்சியை கமல் சாடும் சுருக் வசனங்கள் அருமை. வசனகர்த்தாவுக்கு நன்றி.

வெகு நாட்கள் கழித்து திரை அரங்கிற்கு சென்று அமைதியாய் பார்த்த படம். குடும்பத்துடன் சென்று பார்க்க கூடிய சித்திரம். RaajKamal Films International'க்கும் UTV Motion Pictures'க்கும் பாராட்டுக்கள்.

Monday 21 September 2009

மனதுக்குள் மத்தாப்பு



இந்த இரண்டு நாட்கள் என் வாழ்வின் மறக்க முடியாத நாட்கள். இரண்டு மாதம் கழித்து என் தந்தையை நேரில் கண்டேன். என்னைப் பார்க்க விழுப்புரத்தில் இருந்து புது டெல்லிக்கு புறப்பட்டு வந்திருந்தார்.

இரண்டு நாட்கள இரயில் பயணம் முடிந்து, இரண்டு நாட்கள் என்னுடன் தங்கி விட்டு இன்று மீண்டும் இரயில் ஏறி சென்று விட்டார். என் தந்தைக்கு சமையல் செய்யும் பாக்கியம் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. முன்பு நான் பல முறை அவருக்கு  Maggi சமைத்து கொடுத்துள்ளேன். அவருக்கு பிடிக்காவிட்டாலும் ரசித்து சாப்பிடுவார். ஆனால் இது தான் முதல் முறை அவருக்கு பிடித்த காரக் குழம்பு, மீன் குழம்பு என விதவிதமாக நான் சமையல் செய்தது. Of course, என் அறை நண்பரின் உதவியுடன் தான்...

தீபாவளிக்கு ஊருக்கு சென்றவுடன் என் அம்மாவுக்கும் தங்கைக்கும் ஒரு முறை இது போல் சமையல் செய்து போட வேண்டும். என் நெடுநாள் ஆசையில் ஒன்று அன்று நிறைவேறி விடும்.

நேற்று நானும் அப்பாவும் ஷாப்பிங் போனோம். மிகப் பெரிய Shopping Mall'களை பார்த்தறியாதவர். நான் Food coupons'ஐ தண்ணி போல செலவு செய்வதை பார்த்து பிரமித்து இருக்கலாம். ஆனால் தன் பிள்ளை சம்பாரித்து செலவு செய்வதை பார்த்து கண்டிப்பாய் பூரித்து இருப்பார்.

நான் நிரம்ப மகிழ்ச்சியாய் இருப்பதற்கு முக்கியமான காரணம் மேலும் ஒன்று உள்ளது. இந்த வலைப் பதிவில் உள்ள என் கவிதைகளை தந்தையிடம் காண்பித்தேன். நான் கல்லூரி சமயத்தில் எழுதிய கவிதைகளை எனக்குத் தெரியாமல் படித்ததையும், என்னுள்ளே இப்படி ஒரு ஆற்றல் உண்டு என்பதை எண்ணி வியந்ததையும் சொன்னார். இத்தனைக்கும் இப்பொழுது எழுதும் அளவுக்கு சுமாராக கூட அப்பொழுது எழுதவில்லை. என்ன இருந்தாலும் தன் மகனை விட்டுக் கொடுப்பாரா? அதான் அப்படி கூறினார் போலும்.

ஆனால் இன்று படித்து விட்டு எதுவுமே சொல்லவில்லையே. ஒருவேளை  அம்மாவிடம் போய் சொல்லுவாரோ? அம்மாவிடம் தனிமையில் ஒரு நாள் இதைப் பற்றி கேட்போம். சப்பைக் கவிதைக்கே சூப்பர் என்றவர், என் நண்பர்கள் பாராட்டும் அளவுக்கு இருக்கும் இந்த கவிதைகளை பற்றி பேசாமலா இருப்பார்...

முன்பு கல்லூரி சமயத்தில் படிப்பில் கவனம் சிதறிவிடும் என்று இந்த மாதிரி கவிதைகளைப் பற்றியும் நான் எழுதிய இரண்டு சிறு கதைகளைப் பற்றி அறிந்தும் எந்தக் கருத்தும் கூறவில்லை. "இதெல்லாம் வேணாண்டா. ஒழுங்கா படிக்கற வேலைய பாரு" என்று மட்டும் கூறினார். இன்று அமைதியாய் அவர் இருந்ததே மிகப் பெரிய பாராட்டு. எனினும், அவர் கருத்துக்களை கேட்க ஆவலுடன் இருக்கிறேன் நான்...

பின் குறிப்பு: மேலே இருக்கும் புகைப்படம் என் தங்கையின் நிச்சையதார்த்தின் பொழுது எடுத்தது. A very proud moment for me.

Wednesday 16 September 2009

என் மாற்றங்கள்

மூன்று வருடங்களுக்கு முன்பு
மழை வெள்ளத்தில் மூழ்கியிருந்த
சோழிங்கநல்லூர் சாலைகளில்,
பள்ளிச் சிறுவர்களைப் போல்
முழுக்கால் சட்டையை அரைக்கால் சட்டையாய்
மடித்து விட்டுக் கொண்டு
ஒரு கையில் காலணிகளையும்
வான் மழை தவிர்க்கவும்
வாகனங்களின் சக்கரங்களில்
பட்டுத் தெறிக்கும்
தரை மழையை தடுக்கவும்
மறு கையில்
ஒரு கறுப்புக் குடையுடன்
அலுவலகம் சென்ற
அந்த நாட்கள்...

ஒரு வருடத்திற்கு முன்பு
செவியில் இளையராஜாவும் Eminem'ஐயும்
கசிய விட்டுக்கொண்டு
பெய்யும் சிறு தூரலை பொருட்படுத்தாமல்
bike'இல் அலுவலகம் பரந்த அந்த காலங்கள்...

இன்று குர்காவுன் சாலைகளில்
குளுகுளு ஊர்தியின் உள்ளிருந்து கொண்டு
வெளியே
மழைக்கு பயந்து
ஓடிக் கொண்டிருக்கும்
மென்பொருள் வல்லுனர்களை
ஏளனமாய் பார்க்கும்
இந்த காலங்கள்...

நாளை இதே
குர்காவுன் சாலைகளில்
பழையபடி
ஒரு கையில் காலனிகளுடனும்
மறு கையில் குடையுடனும்
செல்லப் போகும்
அந்த காலங்கள்...

காலங்கள் பல மாறிவிட்டாலும்
மாரியைப் போல் மாறாதது
என் மாற்றங்களும்
மழைப் பெண்ணின் மேல் என் மோகமும்...

இப்படியும் ஒரு சங்கடம்




எவ்வளவோ எழுதுகிறாய்,
என்னைப் பற்றியும் எழுதேன்...
ஒரு ஐந்தரை அடி பூ
என்னைப் பார்த்து கேட்டது...
உலகில் இருப்பவைகளையும்
தினமும் நடக்கும் சம்பவங்களையும்
அழகாய் விவரிப்பதே கவிதைகள்...
ஆனால்
அழகை இன்னும் அழகாய் விவரிப்பது எப்படி?
இதை எப்படி புரிய வைப்பேன் அவளுக்கு?
அடடா,
இப்படியும் ஒரு சங்கடமா எனக்கு,
குழப்பத்துடன் நான்...

Thursday 10 September 2009

நவரசங்கள்

நவரசங்கள் என நாட்டிய கலைகளில் கூறப்படுபவை இவைகள்

காதல்
இன்பம்
துன்பம்
கோபம்
கருணை
அருவருப்பு
பயம்
வீரம்
ஆச்சர்யம்

இந்த நவரசங்களும் அமையுமாறு ஒரு கவிதை உருவானால் எப்படி இருக்கும்? இது தான் என் அடுத்து கிறுக்கலின் கரு...

நம்மைப் பற்றி எழுதுவோம்...


கனமழை பெய்து ஓய்ந்திருந்த சாலையில்
சீறிச் செல்லும் ஊர்தியின்
ஜன்னல் இறக்கி
தவழ்ந்து வந்த தென்றலை
தழுவும் இத்தருணம்,
என் காதலை
கவிதையால் சொல்லும் தருணம்...

எப்பொழுது வேண்டுமானாலும் வருவேனென
இடியுடன் உரைக்கும் மழை மேகங்கள்,
மண்வாசனையுடன் கலந்த இளந்தென்றல்,
என் எண்ணங்கள் போல்
பின்னோக்கி வேகமாய் செல்லும்
சாலையோர கட்டிடங்கள்,
காற்றில் அலைபாயும்
என் முன் தலைமுடி,
சிறு காது மடல்களிலும்
விழி மூடிய இமைகளிலும்
பட்டுத் தெறிக்கும் சிறு தூறல்...
உலகை ரசித்துக் கொண்டே
உன்னைப் பற்றி எழுத
வார்த்தைகள் தேடும் படலம்
ஒருபுறம் இருக்க...
இயற்கையின் அழகில் மூழ்கும்
முயற்சி மறுபுறம் இருக்க,
சட சடவென்று முகத்தில் அறைந்தது
சாரலாய் மாறியிருந்த மாரியின் தூறல்...

ஜன்னலை ஏற்றிவிட்டு
நினைத்துப் பார்க்கிறேன்...
உன்னைப் பற்றி சில வார்த்தைகள்
எழுத எத்தனித்திருந்த நான்
என்னைப் பற்றியே
பல வார்த்தைகள் எழுதியிருந்தேன்...

இதைப் பார்த்து
நீ கோபித்தாலும்
சமாதானம் செய்ய
வழியறிவேன் நான்...

என்னைப் பற்றி எழுதினாலும்
உன்னைப் பற்றி எழுதினாலும்
இரண்டுமே
நம்மைப் பற்றியது தானே
என் கண்ணே....

இது போலவே இன்னும்
நம்மைப் பற்றி
பல கிறுக்கல்கள் எழுதுவேன் நான்...
மன்னிக்கவும்,
நம்மைப் பற்றி
பல கிறுக்கல்கள் எழுதுவோம் நாம்...

Saturday 5 September 2009

என் அறை நண்பன்

நண்பன் ஊருக்கு சென்ற 
இரண்டு நாட்கள் கழித்து 
பசி வயிற்றுடன் 
இரண்டரை மணிக்கு அலுவலகம் செல்லும் 
அந்த பொழுதில் உணர்ந்தேன் 
என் அறை நண்பனின் 
அருமை சமையலையும் 
அவனது அக்கறையையும்...

அந்த இரவு நேரங்கள்


வெள்ளிக்கிழமை வேலைமுடிந்து
அலுவலக நண்பர்கள் அனைவரும்
தத்தம் வீடுகளுக்கு சென்றுவிட,
இரண்டு மணிநேரம்
தனிமையில் அதிகவேலை பார்த்துவிட்டு
மொழி புரியாத ஓட்டுனருடன்
உரையாடல் தவிர்த்து
அலுவலக ஊர்தியில்
வீடு திரும்பும்
அந்த இரவு நேரங்களில்,
இதயத்திற்கும் மூளைக்கும்
போராட்டம் நடந்து
கண்களில் நீர்கோர்க்கும்
அதே இரவு நேரங்களில்
உணர முடிகிறது,
சில ஆயிரம் மைல்கள்
பிரிந்து வந்துவிட்ட
நண்பர்களின் நட்பையும்
பெற்றோர்களின் பாசத்தையும்...

Friday 31 July 2009

பெண்ணே உன்னால்...

கிறுக்கல்கள் கூட கவிதையாகிறது
உன்னால் இயற்றப்பட்டதினால்...
களிமண் கூட கவிதையாகிறது
உன்னால் படைக்கப்பட்டதினால்...
பெண்ணே...
இப்பொழுது புரிகின்றது,
இந்தக் கவிஞனும் பித்தனானது...
உன்னால் வஞ்சிக்கப்பட்டதினால் தானோ?!?!

Wednesday 29 July 2009

என் ஆசைகளின் நேரம்



மழையாய் இருக்க ஆசை தான்,
உன் இதழ் மேல் விழும்
மழை துளிகளாய்...
காற்றாக இருக்க ஆசை தான்,
உன் இடை கொஞ்சும்
இனிய தென்றலாய்...
கவிதையாக இருக்க ஆசை தான்,
உன் எழில் பற்றி இயற்றப்பட்ட
கவித் துளிகளாய்...
காதலாக இருக்க ஆசை தான்,
உன் உள்ளமெல்லாம் நிரம்பி வழியும்
உயிர்க் காதலனாய்...
கனவுகள் காணும் காலம் கடந்துவிட்டது, நிறைவேற்றும் காலம் வந்துவிட்டது...கண்ட கனவுகளை மெய்பிப்போம், வாருங்கள் தோழர்களே!...

Thursday 9 July 2009

செல்லமடி நீ எனக்கு



பார்த்துப் பழகின கண்கள் தான்
பேசிப் பழகின இதழ்கள் தான்
தொட்டு அணைத்த உடல் தான்
கூடிச் சிரித்த அதே சிரிப்புத் தான்...
ஆனால்,
என்றும் சலிக்காத
செல்லமடி நீ எனக்கு...

Tuesday 7 July 2009

என் காதல்



காத்திருந்த காலங்கள்
கடந்து விட்டதடி
சேர்த்து வைத்திருந்த நினைவுகள்
சிதைந்து விட்டதடி
எழுதி வைத்த காதல் வரிகள்
மறந்து விட்டதடி
தொலைத்த என் இதயம் கூட
கந்தலாய் கிடைத்து விட்டதடி
ஆனால்
பூத்த அந்த காதல் மட்டும்
முள்ளாய் உருத்துதடி
என் இதயத்தில் இன்னமும்...

அழகே என்னை கொல்லடி...



துடித்துக் கொண்டிருக்கும் போதே
பறித்து விட்டாய்
என் இதயத்தை...
பார்த்துக் கொண்டிருக்கும் போதே
பறித்து விட்டாய்
என் விழிகளை...
நினைத்துக் கொண்டிருக்கும் போதே
பறித்து விட்டாய்
என் எண்ணங்களை...
மீதம் இருப்பது என் உயிர்தானடி
அதையும் பறித்துக் கொள்!
சிரித்தபடி போய்
கோள் சொல்கிறேன் கடவுளிடம்,
அவன் அழகிய படைப்பின் விளைவுகள் பற்றி...

Sunday 5 July 2009

காலம் கடந்து செல்வோம்...



கரம் பிடித்து அழைத்து செல்ல நானிருக்கிறேன்,
காலம் கடந்து செல்வோம் வா...
ஷாஜகான் கட்டுவதாய் இருந்த
இரண்டாம் காதல் சின்னமாம்
கருப்பு தாஜ்மகாலை கட்டிட
உதவி செய்திடுவோம்...
அம்பிகாபதியும் அமராவதியும்
அமைதியாய் வாழ
வழி புனைவோம்...
லைலாவும் மஜ்னுவும்
அன்புடன் இல்லறம் ஏற
வகை செய்வோம்...
அப்படியேனும் இக்காலத்தில்
காதல்
தோல்வி நிலைகள் கடந்து
மதம், பொருளாதார வேறுபாடுகள் மறைந்து
வெற்றி வகை சூடட்டும்,
வேற்றுமைகள் மறையட்டும்,
புதிய அன்பு உலகம் மலரட்டும்...
வா அன்பே, காலம் கடந்து செல்வோம்
புதிய காதல் சரித்திரம் படைப்போம்...

கிறுக்கல்கள் காலம் இனி...

நான் கவிதை என்னும் பெயரில் கிறுக்கி பல மாதங்கள் ஆகிவிட்டன...இப்பொழுது மீண்டும் கவிதை வெள்ளத்தில் குதிக்கும் நேரம் வந்தாச்சு...

என்னடா blog எழுதற..ஒரே மொக்கையா இருக்கு என என் நண்பன் Ajith கடிந்து கொண்டதின் பெயரில் புதிதாய் சில சிந்தனை சிதறல்கள் விடலாமென எத்தனிக்கிறேன்...

விரைவில் என் கிறுக்கல்கள் பல இந்த Blog'இல் இடம் பெரும்

எனக்கு பிடித்த வசனம்

இரணகளமான, இரத்த வெள்ளம் நிறைந்த படங்களை இயக்கிய சிறந்த Director'ஆன Quentin Tarantino அவர்களின் மிக சிறந்த படைப்பு Pulp Fiction.
அந்த திரைப்படத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் படம் முழுவதும் இந்த வசனத்தை பலவிதமான தருணங்களில் பலவிதமான முக பாவனைகளுடன் கூறுவார். அந்த கதாபத்திரத்தில் நடித்தவர் பெயர் Samuel.L.Jackson.



அந்த வசனம், என்னை மிகவும் கவர்ந்த வசனம்...

"The path of the righteous man is beset on all sides by the inequities of the selfish and the tyranny of evil men. Blessed is he who, in the name of charity and good will, shepherds the weak through the valley of the darkness. For he is truly his brother's keeper and the finder of lost children. And I will strike down upon thee with great vengeance and furious anger those who attempt to poison and destroy my brothers. And you will know I am the Lord when I lay my vengeance upon you."

குறிப்பு: இந்த வசனமானது பைபிளில் வரக்கூடிய வசனம், Ezekiel 25:17

Friday 8 May 2009

அயன் குறும்பாடல்

அயன் திரைப்படத்தில் இருந்து ஒரு இனிய குறும்பாடல் இதோ...


Thursday 23 April 2009

கொலுசு சத்தம்

காதலியின்
கொலுசு சத்தம்
கேட்டு பிறந்த கவிதைகள்...
அவளுடைய
மெட்டி சத்தம்
கேட்டு இறந்தன...

குறிப்பு: இந்த அழகிய கவிதை என்னுடையது அல்ல...பிறர் சொல்ல கேட்டது...