Tuesday 15 June 2010

உன்னை நான் சந்தித்தேன்


உற்றார் உறவினர் புடைசூழ
வந்தேன் உன்னை காண
எங்களை உபசரித்தே ஓய்ந்துவிட்ட
உன் தந்தை
உன் பெருமை பாடியே அயர்ந்துவிட்ட
உன் தாய்
என் கேள்விக்கணைகளுக்கு முன்னமே பதில்
தந்து விட்ட உன் தங்கை
இதற்கும் மேலாக
என் வீட்டு படை வேறு...
நம்மை பேசவே விடமாட்டார்களோ என்
நினைத்த நேரம் ஒரு தெய்வ குரல்
"பொண்ணு கிட்ட ஏதாவது பேசணுமா?"
என்றொலிக்க உயிர் பெற்ற நான்
மெல்ல தலை அசைத்து வைத்தேன்.

அடுத்த நிமிடம் முற்றத்தில் தனியே நாம்.
கேள்விகள் அனைத்திற்கும்
பதில் கிடைத்து விட்ட நிலையில்
ஒற்றை கேள்வியுடன் நிற்கிறேன்.
சில நிமிடங்கள் மௌனத்திற்கு பின்
"மணிக்கொரு முத்தம் தருவாயா?"
இரு வினாடிகள் உன் கண்கள்
என் கண்களை சந்திக்க,
உன் செவ்விதழ்கள் பிரிந்து
"நொடிக்கொன்று தருவேன் சம்மதமா"
என்றாய் நாணத்துடன்.

விழி கணையாலும் சொற்கணையாலும்
தாக்குண்ட நான்
சுதாரித்து வெளியே தாழ்வாரத்தே இருந்த
என் புதுப் பெற்றோரிடம்
"சம்மதம்" என்றேன்
முற்றத்தில் இருந்த உனக்கும் கேட்கும்படியாக...

2 comments: