Thursday, 20 May 2010

கவிதையான காதல் கதை - எப்படி ஆரம்பித்தது?

பள்ளி காலம் முடிந்து
பருவ காலமாய் ஆரம்பித்தது
அந்த கல்லூரி வாழ்க்கை
முதல் நாளே பார்த்த உன்னை
மனதில் பதிக்க வெகு நாளாகவில்லை
ஒரே வகுப்பிலிருந்தும்
ஒரு வருடம் பேசிக் கொள்ளவேயில்லை...
பின்பு ஒரு நாள்
என்னைப் பார்த்து மெல்லிதாய் சிரித்தாய்
அன்றே புது ஜென்மம் எடுத்தேன்,
கல்லூரி முடிந்த மாலை வேளைகளில் இறந்து
மறுநாள் காலை வேளைகளில் பிறந்தேன்...

ஒரு நாள் எதற்காகவோ பேசிக் கொண்டோம்
பின்னர் பழக அரமபித்தோம்...
அது என்ன மாயமோ தெரியவில்லை,
ஊரெல்லாம் வாய் பேசும் நான்
உன்னிடும் மட்டும் வார்த்தை வராமல் தவித்தேன்
புரிந்து கொண்டேன் இது காதல் என்று
நட்பை கொச்சை படுத்தாமல்
நடந்து கொள்ள போராடினேன்
ஒன்றாய் சிரித்தோம்,
ஒன்றாய் அழுதோம்
காலங்கள் சென்றன
நம் காதலும் வலு பெற்றது
ஆனால் சொல்லத்தான் இயலவில்லை
என்னிடம் நீயும் உன்னிடம் நானும்...

Tuesday, 11 May 2010

கவிதையான காதல் கதை - காதல் கோழை


எத்தனை முறை உன்னையே
சுற்றி சுற்றி வந்திருப்பேன்
அட, நம் ரசனை ஒன்றாய் இருக்கிறதென
உன்னிடம் எத்தனை முறை வியந்திருப்பேன்
சில சமயம் உண்மையாக
பல சமயங்களில் பொய்யாக...

நாம் தனியே நேரம் செலவிட
எவ்வளவு முயன்றிருப்பேன்...
நீ எனக்கு முக்கியமானவள் என
எத்தனை தடவை புரிய வைத்திருப்பேன்...
எல்லாம் தெரிந்தே என்னுடன் பழகி
அறிந்தும் அறியாததும் போல
நடந்து கொண்டாய்...
இதற்கே தரலாமடி
உனக்கொரு செவாலியே விருது...

சொல்லத் துணிவிருந்தால் தான்
எப்பவோ சொல்லி இருப்பேனே
இப்படி என் மனதிடம்
ஒவ்வொரு நாளும்
வசை வாங்கிக் கொண்டிருக்க மாட்டேனே.
கொஞ்சம் உன் நிலை இறங்கி வந்து
உன்னை காதலிக்கிறேன் என்று
இந்த காதல் கோழையிடம்
சொல்லி விட்டுத் தான் போயேன்
புண்ணியமாய் போகும் உனக்கு...

Tuesday, 4 May 2010

சுறா - என் பார்வையில்


என் room mate ஏதோ ஓசியில கூட்டிட்டு போறாரேன்னு நம்பி போனேன். மீதி freinds'லாம் "அட மக்கா, அந்த படமா...வேணாம்டா"னு படிச்சு படிச்சு சொன்னனுவளே. நான் எங்க கேட்டேன். 'ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்டர மாதிரின்னு' சொல்லிட்டு போயிட்டேன். அங்க போய் பாத்தா தான் தெரியுது பய புள்ள எல்லாரையும் வளச்சி வளச்சி குத்திருக்காய்ங்கன்னு. "ஐயோ ராமா, இந்த மாதிரி கழிசடை பசங்க கூடலாம் என்னை ஏன் கூட்டு சேர வைக்கற"ன்னு பொலம்பிட்டே வெளிய வந்தேன். மத்த post'ல சொன்ன மாதிரி இதுல கதைன்னு சொல்ல ஒன்னுமே இல்லையே. இருந்தாலும் try பண்றேன்.

'யாழ் நகர்' குப்பத்துக்கே செல்லப் பிள்ளை நம்ம 'சுறா'. தன்னுடைய கள்ளக்கடத்தல் தொழிலுக்கு உதவியாக இருக்கட்டும்னு கள்ள வோட்டுல மந்திரியானவர் தான் வில்லன். இவங்க life cross ஆகும் போது என்ன நடுக்குதுங்க்றது தான் matter. குப்பத்த காலி பண்ணிட்டு அங்க theme park கட்ட plan போடறாரு minister. ஆனா minister பணத்துலையே அங்க தன் குப்பத்து ஜனங்களுக்கு வீடு கட்டி தராரு சுறா. இதெல்லாம் ஏற்கனவே எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு இல்ல. அட விடுங்கப்பா இந்த கான்செப்ட் தானே பார்த்திபன்ல இருந்து நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி வரைக்கும் நடிச்சு பெரிய ஆள் ஆகி இருக்காங்க. அதுக்காக விஜயும் அதே ஸ்டைல follow பண்ணனுமான்னு நீங்க கேக்கறது என் காதுல விழுது.ஹ்ம்ம்...என்ன பண்றது எல்லாம் நேர கொடுமை..

தல தான் அசல்னு ஒரு குப்பை படத்த கொடுதிட்டார்னு feel பண்ணிக்கிட்டு இருக்கற நேரத்துல இங்க அத விட ஒரு கொடுமை. கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சாம்'ங்கற மாதிரி ஆகிபோச்சு நெலமை. என்ன தமிழ் மக்களை பாத்தா இளிச்சவாய் பசங்களா தெரியுதா? நீங்க குப்பை படமா release பண்ணிட்டே இருப்பீங்க நாங்க அத காசு கொடுத்து தியேட்டர்ல போய் பாக்கணுமா? இப்படிலாம் படம் எடுத்தா ஏன் எல்லாரும் திருட்டு வீசீடீல படம் பாக்கமாட்டான். நான் தெரியாம தான் கேக்குறேன் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மனசாட்சியே இல்லையப்பா. குர்காவூன்ல இது நாள் வரைக்கும் அமைதியா படம் பாத்தேன். இன்னைக்கு என்னடான்னா அவ்ளோ சேட்டை, கும்மாளம், கூச்சல்....இதுல என் room mate'க்கு சந்தோசம் வேற. "பாத்தியா, எங்களுக்கு எவ்ளோ support'னு? ஸ்ஸ்சப்ப்ப்பா....இப்பவே கண்ணா கட்டுதேனு ஆகி போச்சு போன பத்து நிமிஷத்துல.

விஜய்க்குனு சில கேள்விகள் வெச்சிருக்கேன்...
  • உங்களுக்கு 50'வது படம் எடுக்க வேற கதையே கெடைக்கலியா?
  • உங்க ரசிகர்கள் மட்டும் பாக்கவா படம் நடிக்கறீங்க? (பாவம் producer'னு கூட சொல்ல முடியாது. ஒரு வேளை Income tax கணக்கு காட்ட தான் இந்த மாதிரி படம் எடுக்கறாங்களோ?!)
  • பெரிய ஹிட் எதுவுமே கொடுக்காத ஒரு director கிட்ட எப்படி படம் பண்ணலாம்னு முடிவு பண்ணீங்க? (நீங்க சொல்ற மாதிரிலாம் சீன்ஸ் அண்ட் சாங்க்ஸ் வைப்பாருன்னா)
  • ஆமா, வர வர எல்லா படத்துலயும் இந்த பல்ல கடிச்சிட்டே பேசறீங்களே..அது என்னங்கணா அது, ஸ்டைலா? (சகிக்கல)
  • அந்த கோர்ட் சீன்ல என்னமோ பண்ணீங்களே என்னது அது? ஓ, அதுக்கு பேர் தான் modulation'அ...அட கடவுளே, அட கடவுளே...
  • அப்பரம் அந்த பொம்மாயி பாட்டுல தமண்ணாவோட pant'அ புடிச்சிட்டு என்ன ஆட்டுணீங்களே, அதுக்கு பேர் என்னங்கணா? என்னது dance movement'அ...கொய்யால, வாய்ல எதாவது அசிங்கமா வந்துட போகுது...
குடும்பம் கொழந்தை குட்டியோட படம் பக்கா வராங்கலேன்னு ஒரு சின்ன அக்கறை இருந்த இப்படி பண்ணி இருப்பியா..ராஸ்கல். சின்ன புள்ள தனமா இருக்கு...அவங்க டௌசர இவரு கழட்டி கழட்டி மாட்டுவாராம். இதுக்கு பேரு dance'ஆம். "போக்கிரி"யில அசின் டிக்கியில கை வெச்சப்பவே நாலு பேர் குரல் கொடுத்திருந்தா இன்னைக்கு இந்த நெலமைக்கு போய் இருக்காது.

மணி ஷர்மா மீசிக்ல ரெண்டு பாட்டு மட்டும் கொஞ்சம் beats'ஓட இருக்கு. ஒரு பாட்டு "கும்பிட போனா தெய்வம்" ஸ்டைல்'ல பிளஸ் 4 பொண்ணுங்க ௨ piece'ல. Director Sir இப்படி ஒரு கோவில் திருவிழா நான் எங்கயுமே கேள்வி பட்டதில்லே. Hero Intro தான் கொடுமைனா, அவர் அந்த நெருப்பல இருந்து எந்தரிச்சு வர்றது அத விட கொடுமை. Hero'வ அடிச்சு போட்டது எங்கயோ, ஆனா திடீர்னு சிலைக்கு அடியில இருந்து எந்திரிப்பாராம். அது சரி, இப்படிலாம் logic பாத்தா கதையே இருக்காதே.

தமன்னாக்காக படம் பாக்கலாம்னு கூட சொல்ல முடியல. ஏன்னா வேட்டைக்காரன் அனுஷ்காவ விட இவங்களுக்கு ரொம்ப கம்மியான சீன் தான். படத்தோட டிக்கெட் காச விட popcorn பிளஸ் pepsi செலவு தான் ஜாஸ்தி. ஓசியில டிக்கெட் போட்டா சாப்ட நீ தான் தம்பி வாங்கனும்னு சொல்லாம சொல்லிட்டாரு என் room mate. ஹ்ம்ம்...அது ஒரு தனி கொடுமை. மொத்ததுல படம் முடிஞ்ச ஒடனே நான் பண்ண prayer "கடவுளே, இப்படி ஒரு பாவத்த இன்னைக்கு பண்ணினதுக்காக என்ன தயவு செஞ்சு மன்னிச்சிடு...plsss..." :(

Friday, 23 April 2010

இதுவும் காதலே...



கல்லறையில் நீ,
சிறையறையில் நான்...
தடவியல் நிபுணர்கள் சாட்சி தேடினர்
உயிரற்ற என் உடற்கூட்டை தூக்கிலிட...
எப்படியும் இவர்கள் அறியப்போவதில்லை
அந்த பாழடைந்த மாளிகையும்
அதில் அமைந்த நம் சொர்கத்தையும்...

விடுதலை பெற்று வந்தால்
என் முதல் காரியம்,
அங்கே உள்ள உன்
ரகசிய கல்லறை மேல்
என் படுக்கையறை அமைப்பேன்...
தினமும் இரவில் உன்னை அணைப்பேன்...
என்றும் நீங்காமல்
என்னுடன் இருப்பாய்
என்னைப் புரிந்து கொள்ளாத
என் காதலியே...

Tuesday, 20 April 2010

உனக்கு ஒரு தண்டனை


கருகரு குழலால் என்னை
கவிழ்த்துவிட முயன்றாய்...
நான் கவிழ்ந்தது
உன் குறுகுறு கண்களிலலடி...

துருதுரு பேச்சினில் என்னை
துவட்டி எடுத்தாய்...
நான் துவண்டது
உன் சிற்றிதழ் புன்னகையில்...

பளபளக்கும் பட்டினில் என்னை
பஸ்பமாக்கிவிட துணிந்தாய்...
நான் இடிந்ததோ
உன் கோபத்தின் சிதறலில்...

பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
நீ சிதைத்து விட்ட
எந்தன் இதயச்சிறையில்
என்றும் நீ இருக்க கடவாயாக...

Wednesday, 7 April 2010

பையா - என் பார்வையில்


அடடா, இப்படி ஒரு action படத்துக்காக தானே இவ்ளோ நாள் wait பண்ணோம். Family'யோட பார்க்க கூடிய பஞ்ச் டயலாக் இல்லாத அருமையான படம். Transporter மாதிரி இருக்கும் படம்'ன்னு யாரோ ஒருத்தன் சொன்னத நம்பி படம் பார்க்க போகாம இருந்திருந்தா லிங்குசாமியோட ஒரு action விருந்தை miss பண்ணி இருப்பேன். சரி, இப்போ கதைக்கு போவோம்.

நாலு பசங்களும் ஒரு பொண்ணும் living together ஒரே flat'ல in Bangalore. (செரி, இதெல்லாம் கண்டுகாதீங்க. Software engineer'அ எல்லா படத்துலயும் தான் கூடி வெச்சி கும்மி அடிக்கறாங்களே, என்ன பண்ண...). Room'ல எல்லாருக்கும் வேலை இருக்கு, ஆனா நம்ம ஹீரோ கார்த்திக்கு மட்டும் வேலை இல்ல. Friends'லாம் சேர்ந்து ரெண்டு மூணு வேலைக்கு arrange பண்றாங்க. ஆனா நம்ம ஹீரோ தமன்னாவ பார்த்த குழப்பத்துல எல்லாத்தையும் சொதப்பிடறார். friend'ஓட travels car'அ (Mitsubishi Lancer) எடுத்திட்டு pickup பண்ண போற நம்ம ஹீரோ, திடீர்னு தமன்னாவ pickup பண்ணிட்டு airport போறாரு. கூட வர்ற இம்சையான ஒரு மாமாகிட்டயிருந்து escape ஆகி Mumbai போகணும்னு சொல்றாங்க தமன்னா. As usual, Figure'அ பார்த்த ஒடனே friendship'அ cut பண்ணி விட்டுட்டு சந்தோஷமா புறப்படுகிறார் நம் ஹீரோ. இதுக்கு அப்புறம் தான் படத்தில விறுவிறுப்பே. காரை விட்டு கீழ இறங்கினா ஒன்னு பாட்டு இல்லனா fight தான்.

தமன்னாவ துரத்திகிட்டு ஒரு ஆந்திரா கும்பல். அங்க இருந்து escape ஆகி பொய் கிட்டே இருக்கும் பொது இன்னொரு கும்பல். என்னடான்னு பார்த்தா அது நம்ம கார்த்தி Mumbai'ல பண்ணிட்டு வந்த சேட்டையோட எதிரொலி. ரெண்டு கும்பல் கிட்ட இருந்தும் எப்படி சாமர்த்தியமா தப்பிச்சு மும்பை போறாங்க ரெண்டு பெரும், மும்பை அப்படி கார்த்தி என்ன தான் பண்ணிட்டு வந்தாரு, தமன்னா மும்பைல தன் பாட்டி கூட போய் பத்திரமா சேர்ந்தாங்களா, கார்த்தி தான் லவ் பண்ற விஷயத்த சொன்னாரா...இதெல்லாம் சேர்ந்தா தான் மீதி கதை.

படத்துல சில பல எதிர் பார்த்த twist'கள் இருக்கு. For exa: தமன்னாவுக்கு கார் ஓட்ட தெரியும்ங்கறது, கார்த்தி first time fight போடும் போது 'கில்லி' த்ரிஷா விஜய்'அ பார்த்த மாதிரி ஆச்சர்யமா பாக்கறது எல்லாம் தெரிஞ்ச கதை தான். ஆனா படத்துல பலமே screenplay'உம் Dialogues'உம் தான். சும்மா யூத்துக்கு ஏத்த மாதிரி இருக்கு. கார்த்தியோட friend'அ வர்ற பொண்ணு தெலுங்குல தான் பேசுது. Lip sync ஆகாம இருக்கும் போதே பசங்க correct'அ கண்டுபிடிச்சிடுவாங்க. தமன்னாவும் தெலுங்கு heroine தான். கார்த்தியோட 'ஆயிரத்தில் ஒருவன்' தெலுங்குல நல்ல ஹிட். Bi-lingual movie எடுக்கற ஐடியாவுல தான் ஹீரோ, heroine, கதை களம் எல்லாம் செலக்ட் பண்ணி இருக்கார் லிங்குசாமி. Brilliant Work.

விஜயோட 'வில்லு', 'வேட்டைக்காரன்', அஜித்தோட 'அசல்' மாதிரி குப்பை படங்களுக்கு மத்தியில ஒரு காதல் கலந்த action masala படம். கார்த்தி தன்னோட இந்த இமேஜ்'அ maintain பண்ணிட்டார்னா எங்கையோ போய்டுவார். சில scene'ல சிரிக்கும் போது தெலுங்கு ஹீரோ வெங்கடேஷும் சில டயலாக்ஸ் பேசும் போது நம்ம சூர்யாவும் வந்திட்டு போறாங்க நம்ம கண்கள்ல. அதுவும் கார்த்திக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் தான். யுவனோட music as usual அருமை. Action scenes 'Run' படம் மாதிரி இல்லாம கொஞ்சம் வித்யாசமா ஆனாலும் நம்புற அளவுக்கு இருக்கு. Travels car மாதிரியும் இருக்கணும் ஆனா படத்தோட concept'உக்கு ஏத்த மாதிரி பறக்கணும். Lancer நல்ல selection. Action படத்துக்கு Editing'னா Antony தான். என்னமா இருக்கு எடிட்டிங். chancey இல்ல.

Jegan'ஓட காமெடி நல்லா இருக்கு. Milind Soman'அ ஓர் அளவுக்கு use பண்ணி இருக்காங்க. ஆக மொத்ததுல அந்த படம் மாதிரி இருக்கு, இந்த படம் மாதிரி இருக்குனு சொல்லாம, கொடுத்த காசுக்கு ஒரு அருமையான படம் பார்த்தோமான்னு நெனைச்சு வீட்டுக்கு வந்து சேருங்க.

Sunday, 28 February 2010

விண்ணை தாண்டி வருவாயா - என் பார்வையில்


கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் "Young Superstar"ஆக புது அவதாரம் எடுத்திருக்கும் சிம்பு இளமை ததும்ப அழகாக வாழ்ந்திருக்கும் ஒரு காதல் கதை இது. படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் "சிம்புவா இது?" என ஆச்சர்யபட்டு, பின்னர் அவருடைய mannerism'களில் மயங்கி, அவருடைய காதல் வலி நிறைந்த வாழ்க்கையில் ஒன்றிப் போய் படம் பார்த்தவர்களில் நானும் ஒருவன். சிம்புவை எதற்கு தேர்ந்தெடுத்தார் கௌதம் என குழம்பிய சில ரசிகர்களில் நானும் ஒருவன். அனால் இப்படி ஒரு காதல் கதைக்கு இவரை விட அருமையான choice வேறு யாரும் இருக்க முடியாது.

கதை இவ்வளவு தான் - மேல் வீட்டில் ஜெஸ்ஸியின் மலையாள christian குடும்பம். கீழே வாடகை வீட்டில் கார்த்திக்கின் தமிழ் Hindu குடும்பம். பார்த்த உடனே ஜெஸ்ஸியை காதலிக்கிறார் கார்த்திக். மதம், வயது என காரணம் காட்டி காதலை மறுக்கிறார் ஜெஸ்ஸி. கார்த்திக் அவளை விடாமல் துரத்தி துரத்தி காதலிக்கிறார் நாம் கனவுகளில் காண்பது போலவே. அப்பொழுதே நம் மனதுடன் சப்பென ஒட்டிக் கொள்கிறார் கார்த்திக். ஒரு நிலையில் தனக்கும் கார்த்திக்கை பிடிக்கும், ஆனால் பல பிரச்சனைகள் வரும் அதனால் நமக்குள் காதல் வேண்டாம் என கூறி விடுகிறார் ஜெஸ்ஸி. நண்பர்களாக பழகலாம் என கார்த்திக் வெள்ளை கோடி காட்டி கேட்க, ஜெஸ்ஸி அதற்கு OK சொல்கிறார். ஆனால் நண்பராக பழக முடியாமல் இருவரும் காதலில் விழுகின்றனர். பின்னர் விஷயம் வீட்டுக்கு தெரிகிறது. அண்ணன் முதலில் சண்டை போடுகிறார். பின்னர் தந்தை வீட்டை காலி செய்ய சொல்கிறார். கல்யாணம் செய்ய கேரளாவில் இருக்கும் சொந்த ஊருக்கு செல்கிறார் ஜெஸ்ஸி. ஆனால் கல்யாணத்தை நிறுத்தி விடுகிறார். இதற்குள்ளாக Assistant Director வாய்ப்பு பெறுகிறார் கார்த்திக். சில பல குழப்பும் மிகுந்த காட்சிகளுக்கு பிறகு ஜெஸ்ஸிக்கு திருமணமாகி UK சென்று விட்டதை அறிகிறார் ஹீரோ. மனதை தேற்றி கொண்டு Director ஆகும் முயற்சியில் வெற்றி பெற்று ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படம் முடிந்து release ஆவதற்குள் நடப்பது தான் suspense நிறைந்த climax.

எனக்கு இதில் பல குழப்பங்கள் - அது எப்படி காதலை சொன்ன ஒருத்தரிடம் நண்பராக பழக முடியும் என நம்புகிறார் ஜெஸ்ஸி? இப்படி நடக்கும்னு ஒரு doubt இருக்கும் இல்ல. அப்புறம் எதுக்கு தான் allow பண்றீங்க friend'ஆ இருக்கலாம்னு? நீயும் வேணாம் உன் friendship'உம் வேணாம்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே. செரி விடுங்க படம் மூணு மணி நேரம் போகணும், A.R.Rehman இன்னும் ஒரு ரெண்டு பாட்டு போடணும் இல்ல. அதுக்காக மன்னிச்சு விட்ரலாம். சிம்பு சும்மா பிண்ணி எடுத்திருக்கார். கலக்கல் dance. கலக்கல் mannerism. கலக்கலான dialogue delivery. எல்லாம் கௌதம் மேனனோட கை வரிசை.  cotton saree'யில் படம் முழுக்க மிக அழகாக வந்திருக்கிறார் த்ரிஷா . அவர் நடிப்பும் மிகவும் பொருத்தம். ஆனா அவரை விட assistant director'a வர்ற பொண்ணு செம fugure'னு சொல்லாம இருக்க முடியல.

இந்த படத்தை ஒரு நிஜ அழவாக எடுத்துக் கொண்டால் எனக்கு சில காட்சிகள் பிடிக்கவில்லை என சொல்வேன். குழப்பம் நிறைந்த ஜெஸ்ஸி, அப்படி ஒரு குழப்பவாதியை துரத்தி துரத்தி காதலிக்கும் ஒரு பாவமான ஜீவன். Goa'வில் இருக்கும் நாயகனை சென்னைக்கு கட்டாயம் வருமாறு அழைக்கும் நாயகி, நமக்குள் எல்லாம் முடிந்து விட்டது என கூறுகிறார். "நீ சென்னைக்கு போகனுமானு ஒரு நொடி யோசிச்ச இல்ல" அதனாலையே எனக்கு இந்த காதல் வேண்டாம்னு சொல்ற ஜெஸ்ஸியை நல்லா பளார் பளார்னு நாலு கொடுக்கலாம் போல இருந்தது. இதென்ன காதலா இல்ல test பண்ணி வெளையாடற game'ஆ? படத்தோட அவ்ளோ ஒன்றி போயிட்டேன். அட ஏன்டா இப்படி காதல் காதல்னு சாவரீங்கன்னு கேக்கலாம் போல கூட தோனுச்சு. May be நானும் காதலிக்க ஆரம்பிச்சா இப்படி தோணாதுன்னு நெனைக்கறேன். wait பண்ணி பாப்போம். நம்மள தூக்கி போட்ற மாதிரி ஒரு காதல்வருமான்னு?

சிம்பு கூட வரும் cameraman character அருமை. comedy'க்கு நல்லாவே கை கொடுத்திருக்கிறார். காதலுக்கும் தான். கேரளாவின் இயற்கை காட்சிகளையும், நம்ம ஊர் சென்னையின் ECR, சோழிங்கநல்லூரின் beach resort, என பல  தெரிந்த இடங்களை பார்க்கும் பொழுது மனதிருக்கு இதமாகத் தான் இருக்கிறது. அமெரிக்காவின் அழகை கொஞ்சம் வித்தியாசமாக படம் பிடித்திருக்கிறார் இம்முறை. மிக சிறந்த crew. எடிட்டர் Antony'ஐ பற்றி சொல்லவே தேவை இல்லை. அருமையான வேலைகாரர். இசை புயலின் துள்ளல் படத்திற்கு பெரிய பலம். பாடல்கள் release'ஆன அப்போ ஒரு பாடல் மட்டும் தான் முதலில் பிடித்திருந்தது. But few days back, I started liking all the songs. Particularly "ஆரோமலே" song'ஓட high pitch super. சும்மாவா ரெண்டு Golden Globe கொடுத்தாங்க. இரண்டு காட்சிகளில் திடீரென எதோ ஒரு ஆங்கில பாடல் (rock song மாதிரி) பின்னணி இசையாக வந்தது மனதில் பதியவில்லை. Re-recording as usual அட்டகாசம். படத்தின் climax twist'லாம் ஓகே தான். ஆனா அதுல ஒரு சின்ன matter இடிக்குதே. ரீல் படத்தோட Hero, heroine மற்றும் crew'வோட பஸ்'ல போற scene'அ தான் சொல்றேன். படம் பாத்தவங்களுக்கு கிளைமாக்ஸ் புரிஞ்சு அதுக்கு அப்புறம் இந்த small logic problem யோசிக்க சில மணி நேரமாச்சும் ஆகும். என்ன மாதிரி கொஞ்சம் கவனிச்சும் கவனிக்காம பாத்தீங்கன்னா ஒடனே புரியும்.

எனக்கு தெரிஞ்சு theatre'ல subtitle'ஓட பாத்த முதல் படம் இது தான். நம்ம மக்களுக்கு மலையாளம் புரியாதா, இல்ல இவர் படத்துல வர்ற English dialogues யாருக்கும் புரியாதா? எதுக்கு subtitles? இன்னொரு விஷயம். படத்துல கெளதம் தன்ன தானே நக்கல் அடிச்சிருக்கார். அந்த scene கூட நல்லா இருக்கு. அட ஏன் தான் படத்துல ஒரு dialogue திரும்ப திரும்ப வருதுன்னு தெரியல. "நான் ஏன் உன்னை காதலிச்சேன்"? இந்த கேள்விய கேட்டு கேட்டு கொய்யால என்னை tension பண்ணிட்டாங்க. மொத்ததுல ஜெச்சியோட வார்த்தைகள்ல சொல்லனும்னா "It's a feel good film". என் style'ல சொன்னா, படம் பாருங்க. ஆனா அதே மாதிரி லவ் பண்ணாதீங்க. மவனே பேஜார் ஆகிடுவீங்க :D

Wednesday, 24 February 2010

சீறும் சிங்கம் சச்சின்

சச்சினின் இப்படி ஒரு ஆட்டத்திற்காக மொத்த நாடே காத்து கிடந்தது. அந்த இனிய நிகழ்வு இன்று குவாலியரில் அரங்கேறியது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் முதன் முறையாக ஒருவர் இரட்டைச் சதம் அடித்திருக்கிறார். அந்த சாதனையை படைத்தது ஒரு இந்தியர் என நினைக்கும் பொழுது நெஞ்சம் பெருமிதம் கொள்கிறது.

இன்னும் போட்டி முழுதாக முடியவில்லை. இருப்பினும் என்னால் சச்சினை பற்றி உடனே எழுதாமல் இருக்க முடியவில்லை. நாளை பல பத்திரிகைகளும், என்னை போன்ற வலை மனை எழுத்தாளர்களும் சச்சினை மெச்சிக் கொண்டிருப்பார்கள். ஆனால முதல் மரியாதை எனதாக இருக்க இந்த ரசிகனுக்கு ஒரு சின்ன ஆசை. போட்டி முடிவை பற்றியெல்லாம் எவனுக்கு அக்கறை. தென் ஆப்பரிக்கா நானூற்றி சொச்சம் ரன்களையே துரத்திச் சென்று உலகின் நம்பர் 1 அணியான ஆஸ்திரேலியாவை தோற்கடித்தவர்கள். போட்டியின் முடிவு எப்படி இருப்பினும் சச்சினின் சாதனை ஒரு வரலாற்றுச் சிறப்பு.

சென்னையில் 1997'இல் சயீத் அன்வர் 194 ரன்கள் குவித்த பொழுது ஏற்பட்ட அவமானக் கரையை இன்று துடைத்தெரிந்திருக்கிறார். என்னவொரு மகத்தான நாள். முன்னே ஓர் நாள் சச்சின் 186  ரன்கள் குவித்த தினம் இவர் அன்வரின் சாதனையை முறியடிக்க மாட்டாரா என ஒவ்வொரு ரன்னுக்கும் கணக்கு பண்ணி கொண்டிருந்தேன் நான். இத்தனைக்கும் எனக்கு கிரிக்கெட்டின் மேல் அவளவாக ஈடுபாடு இல்லை. யாரவது ஸ்கோர் சொன்னால் காதில் போட்டுக் கொண்டு போய் விடுவேன். ஆனால் 1997'ஆம் ஆண்டு அன்வரின் 194, இந்தியாவின் பந்து வீச்சையும், முக்கியமாக பீல்டிங்கை குறை சொல்லும் காலமாக மாற்றியது. எத்தனை கேட்ச்சுகள் கோட்டை விட்டிருப்போம் அன்று. எத்தனை ரன் அவுட்டுகள் விட்டிருப்போம்.

இன்று அன்வரின் சாதனையையும், சச்சினின் சாதனையையும் தராசில் நிறுத்திப் பார்க்கிறேன். எவ்வளவோ மாறுதல்கள் வந்துவிட்டன ஒரு நாள் கிரிக்கெட் விளையாட்டில் இன்று. அன்வரின் பக்கம் இது சாதகமாக இருந்தாலும் இருப்பினும் சச்சினின் விளையாட்டில் ஒரு பிழை கூட இல்லை. அன்று அன்வர் பல பிழையுடன் விளையாடினார். நம்மவர்களின் பீல்டிங் சரியில்லாத காரணத்தால் அவ்ளோ பெரிய ஸ்கோர் எடுக்கும் நிலை ஆயிற்று. இவ்வளவு வயதிலும் அத்தனை சிரத்தையுடன் தனக்கே உரிய பாணியில் சச்சின் அடித்த இரட்டைச் சதம், தன் தரத்தால் தராசில் எடை கூடி கீழே சென்று விட்டது. 1997'இல் அன்வர் செய்த சாதனையை சமீபத்தில் ஒரு ஜிம்பாப்வேகாரர் சமன் செய்துள்ளார். ஆனாலும் அந்த மாட்ச்சில் வங்காள தேசம் வெற்றி பெற்றது. அதனால் அவர் சாதனையை இங்கே நான் கருத்தில் கொள்ளவில்லை.

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது எனும் பழமொழிக்கு சிறந்த உதாரணம் நம் சச்சின். கிரிக்கெட் உலகில் பல ஜாம்பவான்களில் ஒருத்தராக மட்டுமே இருந்த சச்சின், இன்று இந்த சாதனையால் தனித்து நிற்கிறார். மனதி ஒரே ஒரு சின்ன வருத்தம். அன்வர் சாதனை படைத்த அதே சென்னையில் சச்சினும் சாதனை படித்திருந்தால் மனதுக்கு ஒரு இதமாக இருந்திருக்கும்.

சச்சின் விளையாடவே தேவை இல்லை. சும்மா வந்து நின்றாலே போதும், அரங்கம் அதிரும். வேற ஒரு வீரர் செரியாக விளையாட வில்லை என்றால் அவரை வசை பாடும் நம் நாவு சச்சினை பற்றி மட்டும் பேச எழாது. அவ்வளவு செல்லம் அவருக்கு. வயதானாலும் சிங்கம் சிங்கம் தான் என இன்று நிரூபித்திருக்கிறார். சிங்கம் இன்னும் உறுமிக்கொண்டு தான் இருக்கும். மேலும் பல சாதனைகளை நாம் காணத்தானே போகிறோம். வாழ்க இந்தியாவின் செல்லப் பிள்ளை சச்சின்...

Tuesday, 9 February 2010

யார் அவள்?


மழைபெய்து ஓய்ந்திருந்த
மயக்கும் மாலை வேளையில்
மழையில் முழுதாய் நனைந்துவிட்ட
மங்கை ஒருத்தியை என்
மனை வாசலில் கண்டேன்..
மதிய உறக்கம் கலைந்து
அப்பொழுது தான் விழித்திருந்த நான்
வெளியே ஓடிச் சென்று
அவளை உள்ளே வருமாறு விளிக்க
'பிறிதொரு நாள் வருகிறேன்' என
விரைந்து சென்றுவிட்டாள்.
ஒன்றும் புரியாமல்
உள்ளே சென்றுவிட்டேன் நான்...

பல வருடங்கள் கடந்து
அதே போல் மழை பெய்து
ஓய்ந்திருந்த ஒய்யார மாலைநேரம்
இன்னும் மதிய உறக்கத்திலிருந்து
எழுந்திராத என்னை
இருகரங்கள் இறுகப்பற்றி அழைத்தன.
அதே நங்கை அங்கே,
உற்சாகத்துடன் எழுந்து
அவளுடன் செல்லத் துணிந்த
சில நாழிகள் கழிந்து
திரும்பி பார்க்கிறேன்
என் கட்டிலை...
சுற்றி குடும்பத்தார் கதறிக் கொண்டிருக்க
இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் நான்,
தலைமாட்டில் ஒரு அகல்விளக்குடன்...

Thursday, 4 February 2010

சொல்லாத காதல்


 உனக்காக பல செய்த நான்
எனக்காக வேணும்
என் காதலை சொல்லியிருக்க வேண்டும்...
உனக்காக சில செய்த நீ
எனக்காகவே
உன் காதலை நீயாவது சொல்லியிருக்கலாம்...

சொல்லிக்கொள்ளாத நம் காதல்
காலத்தால் கரைந்து விட,
இன்று கல்லறையில் சந்திக்கின்றோம்
நாலு சமாதி தாண்டி...
என் மனைவியும்
உன் கணவனும்
நம் காலடிகளில் அழுவதை
காண சகியாமல்
இங்கே பல உயிர்கள்
புதைந்து இருக்கின்றன...

இன்று உணர்கிறேன்
சொல்லாத காதலால்
காதலர்கள் மட்டுமல்ல
இன்னும் பிற உயிர்களும் அல்லவா
பாதிக்கப்பட்டு விட்டன..

Monday, 1 February 2010

காதல் என்றால் - Goa

 Goa திரைப்படத்தில் இருந்து எனக்கு மிகவும் பிடித்த ஒரு வலி நிறைந்த பாடல் இதோ...



பாடல் வரிகள்:

இதுவரை இல்லாத உணர்விது,
இதயத்தை துண்டாக்கும் நினைவிது
மனதினை மண்ணோடு புதைத்திடும்
பெண்ணை நம்பாதே....

காதலி என்றால் அத்தனையும் கனவு
கண்மூடியே வாழ்கின்ற உறவு,
பெண்கள் என்றால்
ஆணை கொள்ளும்
நோய் ஆனதே...

ஐயோ, இந்த இளமையின் தொடக்கம்
இன்றே முற்றுபுள்ளி
அதை சொல்லாமல் சொல்லி
நம்மை பைத்தியமாக்கும்
பெண்ணைத் தேடி தொலையாதே...

என் உறக்கம் கலைத்தவள்



சிறு வயதில் உண்டான காதல் இது,
இதயத்தில் எழவில்லை என்றாலும்
உள்ளேபுக வெகுநாட்கள் ஆகவில்லை...
காதலில் ஆரம்பித்து
கல்யாணத்துடன் தொடர்கிறது என் கதை...

அன்று காதல் நினைவுகளால்
என் உறக்கம் கலைத்தவள்,
இன்று மனைவியான பின்னும்
மறக்காமல் கலைக்கிறாள்
என் உறக்கத்தை
தன் குறட்டை ஒலியால்...

பல மாதங்களாய்
புதுமனைவியின் இந்த இன்னலை
பொறுத்து வரும் நான்
இன்று புயலாணேன்...
என் பக்கத்தே புரண்டு படுத்தவளை
இழுத்தணைத்து
இதழ்களை இருட்டில் தேடி
அழுத்தமாய் முத்தமொன்றை பதித்தேன்!
செல்ல சிணுங்கலுடன்
கண்ணிமைகள் படபடத்து
மீண்டும் உறங்கத் தொடங்கியவளிடம்
குறட்டைச் சத்தம் குறைந்திருந்தது...

மிகப் பெரிய மருத்துவச் சாதனை
செய்துவிட்ட மகிழ்ச்சியில்
உறங்கச் சென்றேன் நான்
பலத்த குறட்டையுடன்,
மனைவியும் மருந்து கண்டுபிடிக்கட்டுமே என்று ;)

Sunday, 24 January 2010

இயற்கை குழந்தை



Visibility பூஜ்ஜியமென வீதியெங்கும் பேச்சு...
வழியெங்கும் வியாபித்திருக்கும்
வெள்ளைப் பணிக்குடையை
வர்ணிக்க ஆளில்லை,
வசைக்க மட்டும் ஆயிரம் பேர்...

மாலைச் சூரியன் மறைந்ததும்
கூட்டினில் அடைந்திடும் குஞ்சுபோல்
வீட்டினில் வந்து சேர்ந்து
பாரினில் நடந்த கதைபல பேசி
ஊனுக்கு உணவிட்டு
உறங்கச் சென்ற கரிகாலன் காலத்திலும்
பனிக்காலம் இருந்திற்று...

கோலங்களுக்காகவும், செல்விக்காகவும்
உறக்கத்தை தள்ளிப்போட்ட மனைவிமார்களும்
பேய்கூட பாய் போட்டுறங்கும் வேளையில்
பணிமுடிந்து திரும்பும் கணவன்மார்களும்
நிறைந்த இக்காலத்தேயும்
பனிக்காலம் இருக்கத்தான் செய்கிறது...

பனி அதிகமாகவில்லை
மனிதா
உன் பணி தான் அதிகமாகிவிட்டது...
Car'இனில் செல்கையில்
கடும்பனியையும் காலமாற்றங்களையும் கடிபவனே
கவலை கொள்ளாதே!
ஓசோனில் ஓட்டைபோட தெரிந்த உனக்கு
இது எம்மாத்திரம்...
இமாலயம் உருகுகிறது இங்கே
எரிமலைகள் வெடிக்கிறது அங்கே
உன் கைங்கர்யங்களில் நொடிந்து போன
இயற்கை குழந்தையின்
கோபமும் தாபமும் தான் அது...

என்னடா, இயற்கையெனில் அன்னை தானே?
ஏது குழந்தையென வியக்காதே!
அன்னை தான் மறித்து
பல மாமாங்கம் ஆயிற்றே...
குழந்தையின் குரல்வளையை
நசுக்கத் தான்
இங்கே போராட்டம் நடக்கிறது...

காலங்களை குற்றஞ் சொல்லாதே!
மானுடகாலமே காலமாகிக் கொண்டிருப்பதை உணர்..
வாழ்க மானுடம், வாழும் காலம் வரை,
பாவம் இயற்கை, பாழும் காலம் வரை...

Thursday, 3 December 2009

என் தந்தையின் பார்வையில்...


மறந்தும் கூட எடுத்துவிடாமல்
தெரிந்தே மறந்துவிட்டு சென்ற
என் மூக்கு கண்ணாடியை
எடுத்து வரும்படி
வாசலில் இருந்து பணித்தேன்...
"உங்களுக்கு எப்பவும் இதே வேலை,
எப்படித் தான் மறந்து போவீங்களோ?" என
செல்லமாய் சிணுங்கிக் கொண்டே
உள்ளிருந்து வரும் உனக்கு
புன்னகையை பதிலாய் வழங்கி
கண்ணாடியை வாங்கி
சட்டைப் பையில் வைத்துவிட்டு
இடப்பக்க கண்ணாடியில்
உதட்டை சுழித்து வழியனுப்பும்
உன் பிம்பத்தை
பார்த்து விட்டு செல்லும்
அந்த நாட்கள் மட்டுமே
இனிதாய் கழிகின்றன எனக்கு...
இதை எப்படி புரிய வைப்பேன்
என் ஞாபகமறதியை
குற்றஞ் சொல்லும்
நம் மகனிடம்...

Wednesday, 11 November 2009

நானும், நீயும், மழையும்...

நேற்று நள்ளிரவில் கலைஞர் தொலைக்காட்சி செய்த பெரும்பிழை தொடர்ந்து ஐம்பது (குறைந்த பட்சம்) மழைப் பாடல்கள் ஒளிபரப்பியது தான். அத்தனைப் பாடல்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் பொழுது மழைப் பெண்ணை பற்றி எழுதாமல் உறக்கம் எங்ஙனம் வரும்? இதோ அந்தக் கவிதை...



வானம் கறுத்து மழை வரத்துவங்கும்
அந்நேரங்களில்
உன் முகமும் கறுத்துப் போகும்...
எனக்கும் உனக்கும் இடையே
இவளொருத்தி வந்துவிட்டாளே
என புகைவாய் உள்ளுக்குள்..
குடையும் மழையங்கிகள்  வீட்டில் இருந்தும்
'எடுத்து வர மறந்து விட்டேனே'
என்பேன் நான்,
உன் சிறிய குடையில்
இருவரும் ஒன்றாய் நடக்கும்
அந்த இனிய தருணங்களுக்காக..

இருவரது முதுகுகளிலும் மழைநீர்
சொட்ட சொட்ட
முன்னந்தலைகளை முட்டிக் கொண்டு
மெல்ல ஊர்ந்து செல்வோம்
சென்னை சாலைகளில்...
காதலர்களை கண்டோ என்னவோ
கார்கள் கூட ஒதுங்கிச் செல்லும்
சேற்றினை வாரி இறைக்காமல்...

மழைப் பெண்ணின் மேல்
நீ கொண்ட கோபத்தை
மேலும் கூட்ட வேண்டுமென்றே
குடைக்கு வெளியில் செல்வேன் நான்.
'அச்சோ! உள்ள வாங்க'
என்று என்னை இழுத்தணைத்து
குடையினுள் கொண்டு வருவாய்...
அந்த சில நேரங்களில் மட்டும்
மழையை மெச்சுவாய் நீ,
கடவுளை மேச்சுவேன் நான்...

சண்டை சமாதனம் ஆயிற்று
என நினைப்பதற்குள்
ஒரு தும்மல்
தும்மி விடுவேன் நான்...
'இந்தா பிடி, என் சாபம்'
என மழையை வைதுவிட்டு
வீட்டினுள் நுழைந்தவுடன்
காபி போட சென்று விடுவாய் நீ...

உடை மாற்றி, தலை துவட்டி
இன்னும் ஈரமாகவே சமையலறையில்
மும்முரமாய் இருக்கும் உன்னை
பின்னால் வந்து
கட்டி அணைப்பேன் நான்!
'அடப் பாவிகளா!
மொத்தத்தில்
உங்கள் காதல் போதைக்கு
நான் ஊறுகாயா?'
என புலம்பல் கேட்கும்
சமையலறை ஜன்னலில் பட்டுத்தெறித்த
மழைத்துளியிடம் இருந்து...

Tuesday, 6 October 2009

சில தருணங்கள்...

சுட்டெரிக்கும் சூரியனையும்
சில்லென்று உணர்ந்ததுண்டு,
கைவிரல்கள் பற்றி கடற்கரையோரம் நடந்தபொழுது...

சிலிர்க்கும் இரவினை
சுடும் நெருப்பாய் அறிந்ததுண்டு,
அருகருகே இருந்தும் மௌனித்து பயணித்த பொழுது...

விளையாட்டில் தோற்றும்
வேதனையின்றி மகிழ்ந்ததுண்டு,
என்னைத் தேற்றுவதற்கு நீ வந்த பொழுது...

கசக்கும் பாகற்காயையும்
இனிப்பாய் சுவைத்ததுண்டு,
உனக்கு பிடித்தவை என தெரிந்த பொழுது...

இரவின் நீளத்தை
சிறிதோ என எண்ணியதுண்டு,
என்னவளாய் இன்று நீ ஆன பொழுது...

Sunday, 27 September 2009

உன்னை போல் ஒருவன் - என் பார்வையில்



குருதி புனல் படத்திற்கு பிறகு பாடல்கள் இல்லாமல் வெளிவந்த ஒரு சிறந்த விறுவிறுப்பான திரை சித்திரம். "Wednesday" என்ற ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக் என்றாலும் கமலஹாசனின் நடிப்பாற்றலையும் அவர் மகளின் இசையையும் காணவே நேற்று திரை அரங்கிற்கு சென்றிருந்தேன்.

கதை கரு ஏற்கனவே தெரிந்தாலும் படம் பார்க்க செல்லும் சில மனிதர்களில் நானும் ஒருவன். திரைக்கதை அமைக்கப் பாத்திருக்கும் விதம் அறிய சென்றிருந்தேன். மோகன்லால் என்ற மிகச் சிறந்த நடிகரை தமிழ் படங்களில் அதிகம் பார்க்கும் பாக்கியம் நம் தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் என்னுள்ளே எழத் தான் செய்தது. இனி நாம் கதை களத்திற்கு வருவோம்...

ஒரு சாதாரண மனிதனின் கோபம் எங்கு சென்று முடியும் என்பது தான் கதை. போலீஸ் கமிஷனர்'க்கு போன் செய்து நகரத்தின் முக்கியமான பல பகுதிகளில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன் என்று சொல்லுவதில் ஆரம்பித்து இறுதியில் அனைத்தையும் முடித்துவிட்டு காய்கறி கூடையுடன் அந்த கட்டிடத்தில் இருந்து இறங்கிச் செல்லும் கடைசி காட்சி வரை கமலின் நடிப்பு தூக்கல். மோகன்லால்'ஐ பற்றி கேட்கவே வேண்டாம். போலீஸ் கமிஷனர்'ஆக கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறார். ஆனால் அரங்கத்தில் பிரபு அந்த வேடத்தை ஏற்று நடித்திருக்கலாம் என்ற கருத்துக்கள் செவியில் விழுவதை தவிர்க்க முடியவில்லை.

'கேரளா மட்டுமில்லை இதுவும் என் நாடு தான்' என தமிழ்நாட்டைப் பற்றி மோகன்லால் குறிப்பிடும் இடம் அருமை. Aarif'ஆக வரும் இளம் காவல் அதிகாரி முகத்தை இறுக்கமாக வைத்திருக்க ஏனோ என் நேரமும் Chewing Gum மென்றபடி கொண்டிருக்கிறார். இவரை ஏதோ ஒரு பனியன் விளம்பரத்தில் பாரத்ததாய் ஞாபகம். Police Informer'இன் வீட்டில் அவரின் தங்கையிடம் சில்மிஷம் செய்யும் அதிகாரியை புரட்டி எடுக்கும் காட்சி அருமை. Sethu'வாக வரும் அதிகாரியும் நடிப்பில் அருமை. லஞ்சம் வாங்கும் அதிகாரியின் பையில் இருந்து 100 ரூபாயை bike'காரரிடம் அளிக்க வைக்கும் இடத்தில் பளிச்சிடுகிறார்.  ஊருக்கு செல்லும் தன் மனைவி ஒருபுறம், தீவிரவாதிகளை கையாள வேண்டிய சூழல் மறுபுறம் என கதாபாத்திரம் வடிவமைக்கபட்டிருப்பது அருமையிலும் அருமை.

தன் flash back'ஐ சொல்லும் பொழுது 'கருவருத்தல்' என்னும் வார்த்தையின் பொருளை தான் உணர்ந்த இடத்தை கமலஹாசன் கூறும் தருணங்களில், அப்படி செய்த கயவர்களை நட்டநடு சாலையில் நிற்க வைத்து சுடவேண்டும் என்னும் வேகம் நம்மிடையே எழுகிறது. கனமான காரணம் தான் அவர் இவ்வாறு மாறுவதற்கு.

பெண் reporter என்றால் புகைப் பிடிக்க வேண்டும், Computer Geek என்றால் தலையை படியவாராமல் அலைய வேண்டும் என்ற Kollywood'இன் எண்ணம் மாற வேண்டும். ராகவன் மாறார் - இனிமையான மலையாள பெயர். நாயர் என்ற பெயர் இல்லாமல் ஒரு மலையாள character வைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

Shruthi Hassan'இன் இசை ஒரு த்ரில்லர் படத்திற்கு எப்படி அமைய வேண்டுமோ அப்படி இருக்கிறது. பாடல்கள் இருந்திருந்தால் அவரின் திறமையை மேலும் அறிய வாய்ப்பு அமைந்திருக்கும். பார்ப்போம். மீண்டும் ஒரு படத்திற்கு இசை அமைக்காமலா போய் விடுவார்.

சென்னை நகரத்தையும் நகரின் பல பகுதிகளையும் 'இவ்வளவு அழகா நம் நகரம்' என எண்ணும் வகையில் ஒளிப்பதிவு செய்தவர்க்கு பாராட்டுக்கள். 'நீங்க தான் எல்லாத்தையும் காட்றீங்களே' என தொலைக்காட்சியை கமல் சாடும் சுருக் வசனங்கள் அருமை. வசனகர்த்தாவுக்கு நன்றி.

வெகு நாட்கள் கழித்து திரை அரங்கிற்கு சென்று அமைதியாய் பார்த்த படம். குடும்பத்துடன் சென்று பார்க்க கூடிய சித்திரம். RaajKamal Films International'க்கும் UTV Motion Pictures'க்கும் பாராட்டுக்கள்.

Monday, 21 September 2009

மனதுக்குள் மத்தாப்பு



இந்த இரண்டு நாட்கள் என் வாழ்வின் மறக்க முடியாத நாட்கள். இரண்டு மாதம் கழித்து என் தந்தையை நேரில் கண்டேன். என்னைப் பார்க்க விழுப்புரத்தில் இருந்து புது டெல்லிக்கு புறப்பட்டு வந்திருந்தார்.

இரண்டு நாட்கள இரயில் பயணம் முடிந்து, இரண்டு நாட்கள் என்னுடன் தங்கி விட்டு இன்று மீண்டும் இரயில் ஏறி சென்று விட்டார். என் தந்தைக்கு சமையல் செய்யும் பாக்கியம் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. முன்பு நான் பல முறை அவருக்கு  Maggi சமைத்து கொடுத்துள்ளேன். அவருக்கு பிடிக்காவிட்டாலும் ரசித்து சாப்பிடுவார். ஆனால் இது தான் முதல் முறை அவருக்கு பிடித்த காரக் குழம்பு, மீன் குழம்பு என விதவிதமாக நான் சமையல் செய்தது. Of course, என் அறை நண்பரின் உதவியுடன் தான்...

தீபாவளிக்கு ஊருக்கு சென்றவுடன் என் அம்மாவுக்கும் தங்கைக்கும் ஒரு முறை இது போல் சமையல் செய்து போட வேண்டும். என் நெடுநாள் ஆசையில் ஒன்று அன்று நிறைவேறி விடும்.

நேற்று நானும் அப்பாவும் ஷாப்பிங் போனோம். மிகப் பெரிய Shopping Mall'களை பார்த்தறியாதவர். நான் Food coupons'ஐ தண்ணி போல செலவு செய்வதை பார்த்து பிரமித்து இருக்கலாம். ஆனால் தன் பிள்ளை சம்பாரித்து செலவு செய்வதை பார்த்து கண்டிப்பாய் பூரித்து இருப்பார்.

நான் நிரம்ப மகிழ்ச்சியாய் இருப்பதற்கு முக்கியமான காரணம் மேலும் ஒன்று உள்ளது. இந்த வலைப் பதிவில் உள்ள என் கவிதைகளை தந்தையிடம் காண்பித்தேன். நான் கல்லூரி சமயத்தில் எழுதிய கவிதைகளை எனக்குத் தெரியாமல் படித்ததையும், என்னுள்ளே இப்படி ஒரு ஆற்றல் உண்டு என்பதை எண்ணி வியந்ததையும் சொன்னார். இத்தனைக்கும் இப்பொழுது எழுதும் அளவுக்கு சுமாராக கூட அப்பொழுது எழுதவில்லை. என்ன இருந்தாலும் தன் மகனை விட்டுக் கொடுப்பாரா? அதான் அப்படி கூறினார் போலும்.

ஆனால் இன்று படித்து விட்டு எதுவுமே சொல்லவில்லையே. ஒருவேளை  அம்மாவிடம் போய் சொல்லுவாரோ? அம்மாவிடம் தனிமையில் ஒரு நாள் இதைப் பற்றி கேட்போம். சப்பைக் கவிதைக்கே சூப்பர் என்றவர், என் நண்பர்கள் பாராட்டும் அளவுக்கு இருக்கும் இந்த கவிதைகளை பற்றி பேசாமலா இருப்பார்...

முன்பு கல்லூரி சமயத்தில் படிப்பில் கவனம் சிதறிவிடும் என்று இந்த மாதிரி கவிதைகளைப் பற்றியும் நான் எழுதிய இரண்டு சிறு கதைகளைப் பற்றி அறிந்தும் எந்தக் கருத்தும் கூறவில்லை. "இதெல்லாம் வேணாண்டா. ஒழுங்கா படிக்கற வேலைய பாரு" என்று மட்டும் கூறினார். இன்று அமைதியாய் அவர் இருந்ததே மிகப் பெரிய பாராட்டு. எனினும், அவர் கருத்துக்களை கேட்க ஆவலுடன் இருக்கிறேன் நான்...

பின் குறிப்பு: மேலே இருக்கும் புகைப்படம் என் தங்கையின் நிச்சையதார்த்தின் பொழுது எடுத்தது. A very proud moment for me.

Wednesday, 16 September 2009

என் மாற்றங்கள்

மூன்று வருடங்களுக்கு முன்பு
மழை வெள்ளத்தில் மூழ்கியிருந்த
சோழிங்கநல்லூர் சாலைகளில்,
பள்ளிச் சிறுவர்களைப் போல்
முழுக்கால் சட்டையை அரைக்கால் சட்டையாய்
மடித்து விட்டுக் கொண்டு
ஒரு கையில் காலணிகளையும்
வான் மழை தவிர்க்கவும்
வாகனங்களின் சக்கரங்களில்
பட்டுத் தெறிக்கும்
தரை மழையை தடுக்கவும்
மறு கையில்
ஒரு கறுப்புக் குடையுடன்
அலுவலகம் சென்ற
அந்த நாட்கள்...

ஒரு வருடத்திற்கு முன்பு
செவியில் இளையராஜாவும் Eminem'ஐயும்
கசிய விட்டுக்கொண்டு
பெய்யும் சிறு தூரலை பொருட்படுத்தாமல்
bike'இல் அலுவலகம் பரந்த அந்த காலங்கள்...

இன்று குர்காவுன் சாலைகளில்
குளுகுளு ஊர்தியின் உள்ளிருந்து கொண்டு
வெளியே
மழைக்கு பயந்து
ஓடிக் கொண்டிருக்கும்
மென்பொருள் வல்லுனர்களை
ஏளனமாய் பார்க்கும்
இந்த காலங்கள்...

நாளை இதே
குர்காவுன் சாலைகளில்
பழையபடி
ஒரு கையில் காலனிகளுடனும்
மறு கையில் குடையுடனும்
செல்லப் போகும்
அந்த காலங்கள்...

காலங்கள் பல மாறிவிட்டாலும்
மாரியைப் போல் மாறாதது
என் மாற்றங்களும்
மழைப் பெண்ணின் மேல் என் மோகமும்...

இப்படியும் ஒரு சங்கடம்




எவ்வளவோ எழுதுகிறாய்,
என்னைப் பற்றியும் எழுதேன்...
ஒரு ஐந்தரை அடி பூ
என்னைப் பார்த்து கேட்டது...
உலகில் இருப்பவைகளையும்
தினமும் நடக்கும் சம்பவங்களையும்
அழகாய் விவரிப்பதே கவிதைகள்...
ஆனால்
அழகை இன்னும் அழகாய் விவரிப்பது எப்படி?
இதை எப்படி புரிய வைப்பேன் அவளுக்கு?
அடடா,
இப்படியும் ஒரு சங்கடமா எனக்கு,
குழப்பத்துடன் நான்...